முகப்பு
தமிழ்நாடு

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில்கள் பாழாகிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

Updated On : 19 அக்டோபர், 2024 at 7:54 AM
சிதம்பரம் நடராஜர் கோயில்
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்த போது, நீதிபதிகள் இவ்வாறு கூறினர்.

மேலும், தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்களாக கருதுகிறார்கள் என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கனகசபை மீது ஏறி பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அது மட்டுமல்லாமல், நடராஜர் கோயில் தீட்சிதரை பணியிடை நீக்கம் செய்ததும் பிரச்னையானது.

இந்த நிலையில், நடராஜர் கோயில் தீட்சிதர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையத்திடம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற, கடலூர் இணை ஆணையர், பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்தார்.

இந்த ரத்து உத்தரவை, நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் எதிர்த்து முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நடராஜர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என தீட்சிதர்கள் நினைப்பதாகவும் அதனை தாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி, மன கஷ்டங்களை போக்க கோயிலுக்கு வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.

தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்ல அறிகுறி அல்ல என்றும், பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் இல்லை. பக்தர்கள் வரும்வரைதான் கோயில், பக்தர்கள் இல்லாவிட்டால் கோயில் பாழாகிவிடும். கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருபவர்களைபோல தீட்சிதர்கள் நடத்துகிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தங்களுக்கே சொந்தமானது என்று தீட்சிதர்கள் கருதுவதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலானவர்களாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும், இல்லாவிட்டால் விபூதி கூட கிடைக்காது என்றார். மேலும், சிதம்பரம் கோயிலில் மட்டுமே நடத்தப்பட்ட ஆருத்ரா தற்போது பல்வேறு கோயில்களிலும் நடக்கிறது. அது மட்டுமல்ல, முன்பைப் போல், ஆருத்ரா தரிசனம் காண சிதம்பரம் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதில்லை என்றும் நீதிபதி தண்டபாணி கூறியிருக்கிறார்.

பொது தீட்சிதர்கள் மனு மீது பதிலளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →