கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் திங்கள்கிழமை(அக்.21) கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், அபூ ஹனிஃபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் கைதாகியுள்ள 14 குற்றவாளிகளுக்கு எதிராக சென்னை, பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை 4 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள புராதானமிக்க அருள்மிகு கோட்டை சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே, கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த பயங்கரவாத செயலில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஜமீஷா முபீன் என்பவர் ஈடுபட்டதாகவும், அவர் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தி அந்த காரை வெடிக்கச் செய்ய வைத்தபோது உயிரிழந்துவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கையில்லா மனிதர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட மூவரும், மேற்கண்ட பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை அரபிக் கல்லூரியில் பணியாற்றிய அபூ ஹனீஃபா, அங்கு பயில வந்திருந்த ஜமீஷா முபீன் மற்றும் அவருடன் இருந்த பிற நபர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு ஒத்துழைக்க வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.