முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் இரவு நேரங்களில் கதவை தட்டும் வட மாநில கொள்ளையர்கள்!

சேலத்தில் இரவு நேரங்களில் கதவை தட்டும் வட மாநில கொள்ளையர்களில் ஒருவரை மக்கள் பிடித்தனர்.

Updated On : 2 செப்டம்பர், 2024 at 11:44 AM
சேலத்தில் வடமாநில கொள்ளையன் கைது
பகிர்:

சேலத்தில், மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், வடமாநில கொள்ளையர்கள் சிலர், இரவு நேரங்களில் வீட்டின் கதவைத் தட்டி கொள்ளையடிக்கும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொள்ளையன் ஒருவரை பிடித்து மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சூரமங்கலம், ஆசாத் நகர் பகுதியில் நள்ளிரவில் ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில கொள்ளையர்கள் கதவுகளை தட்டி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆசாத் நகரில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அடிக்கடி இதுபோல் சம்பவங்கள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது, இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் வட மாநில கொள்ளையர்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து ஒரு வீட்டிலிருந்து மக்கள், கொள்ளையர்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் பக்கத்து வீட்டு மாடியில் ஏறி திருட முயன்ற போது அவர்களை சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்றபோது அனைவரும் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். இதனை அடுத்து அவரை மொட்டைமாடியில் கட்டி வைத்து மக்கள் அடித்துள்ளனர்.

கொள்ளையன் வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் லிங்கா வயது 25 என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீடுகளில் உள்ள மோட்டார் பம்புகள் கட்டட வேலைக்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் கதவை உடைத்து திருட வந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →