சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டாசு குடோனில் வெடிபொருள்களை இறக்கும்போது நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி ஜெயராமன் என்பவர் பலியானார்.
சிவகாசியைச் சேர்ந்த இவர் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த பருத்திக்காடு கோமாளி வட்டம் பகுதியில் பட்டாசு குடோன் நடத்தி வந்தார்.
அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த பட்டாசு குடோனில் இன்று காலை நாட்டு வெடிகளை இறக்கி வைக்கும் பொழுது கைத்தவறி ஒரு முட்டை கீழே விழுந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த ஜெயராமன் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
பட்டாசு குடோன் செயல்பட்ட பகுதி ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.