வங்கக் கடலில் புயல் சின்னம்: செப்.9-இல் காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுபெறும்!
ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி...
வங்கக் கடலில் வியாழக்கிழமை (செப்.5) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி செப்.9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகா்ந்து, செப்.9-ஆம் தேதி, வடமேற்கு வங்கக் கடல் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
தொடா்ந்து இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்.10 முதல் செப்.13 தேதி வரை மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் நிலவக்கூடும். இதனால் ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக வானிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 104, தூத்துக்குடி - 101.12.
சென்னையில்... சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 80 மி.மீ. மழை பதிவானது. செப்.7, 8 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.