தேவாரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி
தேவாரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவாரம் அருகே விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்துவிட்டு திரும்பும்போது டிராக்டர் கவிழ்ந்ததில் 3 சிறுவர்கள் பலியாகினர்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே மறவபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாற்றில் மார்க்கையன்கோட்டை அருகே கரைக்கப்பட்டது.
பின்னர் டிராக்டர்களில் சிலைகளை கரைத்தவர்கள் ஏறி அமர்ந்து ஊர் திரும்பினர். இவர்களில் மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து சென்ற டிராக்டர் போடி-தேவாரம் சாலையில் கிருஷ்ணன்பட்டி அருகே வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதில் மறவபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஷால் (14), மெயின் ரோட்டைச் சேர்ந்த தமிழன் மகன் நிவாஸ் (15), பஞ்சபாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு மகன் கிஷோர் (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தேவாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.