முகப்பு
தமிழ்நாடு

மௌத் ஆர்கன் வாசித்து மோடியின் மனதைக் கவர்ந்த ஆண்டாள் யானை

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள், பிரதமர் நரேந்திர மோடிக்கு மௌத் ஆர்கன் வாசித்துக் காட்டி, அவரது மனதைக் கொள்ளைகொண்டது.

Updated On : 20 ஜனவரி, 2024 at 1:30 PM
மௌத் ஆர்கன் வாசிக்கும் ஆண்டாள் யானை
பகிர்:

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள், பிரதமர் நரேந்திர மோடிக்கு மௌத் ஆர்கன் வாசித்துக் காட்டி, அவரது மனதைக் கொள்ளைகொண்டது.

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். அப்போது யானைப் பாகன், ஆண்டாள் யானையிடம் மௌத் ஆர்கன் கொடுத்த போது அதனை மோடிக்கு வாசித்துக் காட்டியது. மோடி மெய்மறந்து ஆண்டாள் யானையின் இசையை ரசித்துக் கேட்டார். அதன் தும்பிக்கையை தடவிக்கொடுத்தபடி மோடி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

வாயில் வைத்து இசைக்கப்படும் வாயிசைக்கருவியான மௌத் ஆர்கனை, ஆண்டாள் யானை லாவகமாக தனது தும்பிக்கையால் பிடித்து வாசித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இன்று காலை சென்னையிலிருந்து திருச்சி சென்று அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர்  கோயிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை வந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் யாத்ரி நிவாஸ் எதிரே அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்றார். 

அப்போது ரங்கா ரங்கா கோபுரம் முன்பு ஸ்ரீரங்கம் தலைமை அர்ச்சகர்கள் தலைமையில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.  பின்னர், கோயிலுக்குள் சென்று  வழிபாடு நடத்தினார். தொடர்ச்சியாக தாயார் சன்னதி அருகாமையில்  கம்பராமாயண பாராயணத்தை, மனமுருகிக்  கேட்டார்.

அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார். இன்று ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தியுள்ளார்.

ரங்கா ரங்கா கோபுரம் முன்பு 40 நாதஸ்வர கலைஞர்களின் நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது. இந்த வரவேற்பினை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு காரில் கையசைத்தவாறு சென்றார் பிரதமர் மோடி.

பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2:30 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து தனி விமான மூலம் ராமேஸ்வரம் புறப்படுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.