முகப்பு
தமிழ்நாடு

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா தகவல்

பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தகவல்.

Updated On : 11 ஏப்ரல் 2025, 5:05 pm IST
அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில், தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தலைவராக கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். அது முதல் பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி வைத்திருந்த அதிமுக மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை பேசிவந்தார். ஒரு கட்டத்தில் அதிமுக தலைவர்களும் கூட்டணிக் கட்சி என்று பார்க்காமல், பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, தேர்தல் கூட்டணியும் உடைந்தது. இதனால் கடந்த மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் பாஜகவுக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை விரும்பிய பாஜக தலைமை அண்மையில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை தில்லி அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அடுத்த ஒரு வாரத்தில், சென்னை வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றும், ஏப்ரல் 11ஆம் தேதி தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தன.

சொன்னபடி, தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்று விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்ய, முக்கிய தலைவர்கள் பத்து பேர் மனுவை முன்மொழிந்திருந்தனர்.

அவர் ஒருவர் மட்டுமே விருப்பமனு அளித்தநிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்வாவது உறுதியாகிவிட்டது.

அதனை உறுதி செய்யும் வகையில் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பதிவில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே விருப்பமனு பெறப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அண்ணாமலையின் பணியை பாராட்டும் வகையில், தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகள் பல செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முன்மாதிரியாக விளங்குகிறது.

எனவே, பாஜக தலைமை, அண்ணாமலையின் தலைமை நிர்வாகத் திறன்களை தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.