தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படவிருக்கிறார் என்று மார்ச் மாதத் தொடக்கம் முதல் பேச்சு சூடுபிடித்து வந்த நிலையில், இன்று அது உறுதிசெய்யப்பட்டு, புதிய தலைவர் யார் என்ற கேள்விக்கு விடையும் கிடைத்துவிட்டது.
பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர், மாநில தலைவர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள் என்றும், சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பாஜக புதிய தலைவர் பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்தான் தலைவர், இல்லை இல்லை, இவர்தான் என வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் என சிலரது பெயர்கள் தலைவர் பதவிக்கான போட்டியில் அடிபட்டு வந்த நிலையில் நேற்று திடீரென, பாஜக தலைவர் பதவிக்கான விதிமுறை ஒன்று வெளியானது.
அதில், தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடவிரும்புவோர் 10 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிட தகுதியை இழந்ததாகக் கூறப்பட்டது. இப்படியொரு விதி இருக்கும்போது அண்ணாமலை எப்படி தலைவரானார்? புதிய தலைவர் யார்தான்? என எண்ணற்றக் கேள்விகள் எழுந்தன.
ஆனால், விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாக இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தி அறிவித்துவிட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அது நாளைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். நாளை மாலையே, புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. பாஜக மாநில தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்! தேர்தல் விதி என்னவானது? பொறுப்பாளர் பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.