8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!
பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு...
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் நலமுடன் இருப்பதாகவும் அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அரிவாள் வெட்டு வாங்கின மாணவர் இடம் சக மாணவன் பென்சில் கேட்டதாகவும் அதைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டியதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் கையில் வெட்டு விழுந்து உள்ளது. அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவன் பள்ளிக்குள் எப்படி அரிவாளைக் கொண்டு வந்தான் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் மாணவன் சக மாணவன் மற்றும் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: வக்ஃப் போராட்டம்: மேற்கு வங்கத்தில் இயல்புநிலை திரும்புகிறது!