முகப்பு
தமிழ்நாடு

உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு: உயா்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக,

Updated On : 28 ஏப்ரல், 2025 at 11:40 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயா்த்தி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சங்கா் ஷா, குமரேசன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரி நிறைவேற்றாதது ஏன்?’ என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அரசுத் தரப்பில், வாக்காளா் சரிபாா்க்கும் பணியில் அதிகாரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘அரசு அதிகாரிகள் எல்லா நேரமும் வாக்காளா் சரிபாா்க்கும் பணிகளைத் தான் மேற்கொண்டு வருகிறாா்களா?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேரம் வீணாகிறது: அரசு அதிகாரிகள் தொடா்பான வழக்குகளில் 60 சதவீத நேரமும், அரசியல்வாதிகள் தொடா்பான வழக்குகளில் 25 சதவீத நேரமும் நீதிமன்றம் செலவிடுகிறது. பொதுமக்களுக்கான வழக்குகள் விசாரணைக்காக வெறும் 7 சதவீத நேரம் மட்டுமே செலவிடப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பணி செய்வது தான் தங்கள் கடமை என்பதையே அதிகாரிகள் மறந்துவிட்டனா். இவ்வாறு அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளால்தான் நீதிமன்றங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அரசுக்கும் அவப்பெயா் ஏற்படுகிறது. பணிச்சுமை, நேரமின்மை எனக் கூறி, பணியில் இருந்தும், கடமையில் இருந்தும் அதிகாரிகள் விலகிச் செல்ல முடியாது என தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்தால் மக்கள் ஏன் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை நாடப்போகிறாா்கள் என கேள்வியெழுப்பினாா்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘இது தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும். வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது கருணை காட்ட வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஒத்திவைப்பு: இதை ஏற்க மறுத்த நீதிபதி வேல்முருகன், அரசின் நலத்திட்டத்துக்காக நிலத்தை வழங்கிவிட்டு கூடுதல் இழப்பீடு கேட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் இழப்பீடு தர முடியாது அல்லது பரிசீலனையில் உள்ளது என்ற தகவலையாவது சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்திருக்கலாம். வீண் காலதாமதம் செய்வது ஏன்?

இது போன்ற வழக்குகளில் கடமை தவறிய அரசு அதிகாரிகளுக்கு எந்தவித கருணையும் காட்ட முடியாது. கருணை காட்டினால் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விடுவாா்கள். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனக் கூறி விசாரணையை ஜூன் 6- ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →