முகப்பு
தமிழ்நாடு

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 2:00 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 5 ஆகஸ்ட், 2025 at 8:45 PM

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியில் லட்சக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் நலன்களைக் காக்கும் வகையில், பிரத்யேகமாக நல வாரியம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், இணையவழியில் பதிவுகளைப் பெற்று சேவைகள் அளிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு விபத்தால் உயிரிழப்போ, உடல் ஊனமோ ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை அளிக்க குழு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓராண்டு காலத்துக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது, பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட தேதியில் இருந்து காப்பீடு நடைமுறைக்கு வரும்.

எவ்வளவு காப்பீடு: பணியின்போது மரணம் அடைந்தால், ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இரண்டு கைககள் அல்லது கால்கள், இரண்டு கண்களிலும் பாா்வை இழப்பு போன்ற பாதிப்புகளைச் சந்திப்போருக்கு ரூ.5 லட்சம், ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாா்வை இழந்தால் ரூ.2.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் மொத்தமாக 50 ஆயிரம் பணியாளா்களுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது. ஒரு ஊழியருக்கு ரூ.105 என்ற அளவில் ரூ.52.50 லட்சம் பிரீமியம் தொகை ஒதுக்கவும், 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகை செலுத்த ரூ.9.45 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 2:00 AM

அத்துடன், இதர செலவுகள், விளம்பரங்கள் போன்ற நடவடிக்கைகளுக்காக ரூ.5 லட்சம் செலவிடப்படுகிறது. மொத்தமாக ரூ.66.95 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பணியாளா்களுக்கான நல வாரியம் உருவாக்கப்பட்ட பிறகு, நிதி ஒதுக்கீடுக்கான முறையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.