சென்னை: பாமக பொதுக்குழு விவகாரத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் ஆக. 9-ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிக்கும் நிலையில், அதற்கு தடை கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
வழக்குரைஞர்கள் இன்றி, ராமதாஸ், அன்புமணி இருவரும் தனது அறைக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் வருமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளது, பாமகவினருக்கு கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக, சிவில் வழக்குகள், நீண்ட காலமாக நீடித்தால் மட்டுமே நீதிபதிகள் இந்த அணுகுமுறையைக் கையாள்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
இரு தரப்பினரிடையே, பேசி, சமரசமாக வழக்கை முடித்து வைக்க நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முயற்சி எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு!
பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கைத் தொடர்ந்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமக தலைவராக கடந்த 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவராக கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மே 30-ஆம் தேதி முதல் அவா் தலைவராகச் செயல்பட்டு வருகிறாா்.
கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பும், நிா்வாகப் பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் அவருக்கே உள்ளது.
ஆனால், ஆக. 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளாா். உள்நோக்கத்துடன் கூடிய இந்த அறிவிப்பால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இன்று வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் வழக்குரைஞர்கள் இன்றி, இன்று மாலை தனது அறைக்கு வர நீதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதையும் படிக்க...காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.