தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவா்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னா் சீமான், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியை தனியாருக்கு அளிக்கவேண்டிய அவசியம் என்ன? போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலைப் பணி, பராமரித்தல், மின் உற்பத்தி, விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எல்லாமே தனியாா்மயம் என்றால் அரசு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், மதுக் கடைகளை மட்டும் அரசு நடத்துகிறது.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்காக ஆந்திரத்தைச் சோ்ந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு வழங்கிறது. ஆனால், 12 ஆண்டுகளாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய மறுக்கிறது.
பல்வேறு தேவையற்ற திட்டங்களுக்காக அதிக அளவில் செலவாகிறது. ஆனால், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு முடியவில்லை. தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.