பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்குச் சென்று கம்பு சுற்றுங்கள், தமிழ்நாட்டில் வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 17) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
” நமதுஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதுதான் அவர்கள் அரசியல்! அவர்களைவிடவும் மலிவான அரசியல் செய்கின்றார் ஒருவர்! யாரென்று தெரியும் உங்களுக்கு - அவர்தான் மத்திய பா.ஜ.க. அரசு நியமித்திருக்கின்ற நம்முடைய ஆளுநர் ரவி!
ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற அவர் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சி மேல் அவதூறு பரப்புகின்றார்! தி.மு.க. மேல் அவதூறு பரப்புவார்! திராவிடத்தைப் பழிப்பார்! சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்! இல்லாத திருக்குறளை அச்சிட்டு வழங்குவார்! தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார்! நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுபடுத்துவார்! தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம், உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார்! இதை மட்டும் தான் அவர் செய்கிறார்.
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை நாங்கள் உங்களிடம் சொல்கிறோமோ, இல்லை நீங்கள் எங்களிடம் சொல்கிறீர்களா! இல்லை. மத்திய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளிவிவரங்களே சாட்சியிருக்கிறது!
அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாடு அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், எரிச்சலில், தன்னுடைய கோபத்தை புலம்பலாக பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்.
பள்ளிக் கல்வியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் இந்த 4 ஆண்டு காலத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கின்றோம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆளுநர் கண்டுபிடித்திருக்கிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்
2022-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆளுகின்ற உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் ஆளுநர் அவர்களே, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது இங்கே இல்லை - பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தான் அங்கு சென்று கம்பு சுற்றுங்கள் –தமிழ்நாட்டில் இல்லை. அங்கு சென்று சுற்றுங்கள்.
தொடர்ந்து தமிழுக்கு எதிராக - தமிழ்நாட்டுக்கு எதிராக - தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக - பேசிவிட்டு வருகின்ற ஆளுநரை வைத்து, தன்னுடைய இழிவான அரசியலை மத்திய பாஜக அரசு செய்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். அவர் இருப்பதால்தான் நமக்கு நல்லது என்று நான் ஆரம்பத்தில் இருந்தே நானும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஏனென்றால், நமக்குள் இருக்கின்ற மொழி உணர்வை, இன உணர்வை, திராவிட இயக்கக் கொள்கை உணர்வை பட்டுப் போக விடாமல் - கொள்கை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கின்ற வேலையை ஆளுநர் ரவி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்! அவர் பேசட்டும். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் மக்களாகிய உங்களைப் பற்றிதான். வாக்களித்த உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே சிந்தனை” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.