தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!
தவெக மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு நாளை (ஆக.21) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் 10 முதல் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மாநாட்டைப் போலவே 2 வது மாநாட்டுக்காகவும், முகப்பில் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது அதை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக 30 டன் எடையைத் தாங்கும் ராட்சத கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை நிறுவ நிர்வாகிகள் முயன்றனர். அப்போது கிரேனில் பெல்ட் அறுந்து கொடிக்கம்பம் கீழே சாய்ந்தது.
கம்பம் இரண்டாக உடைந்து நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்து, அந்த கார் கடுமையாக சேதமானது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த கார் மற்றும் கொடிக் கம்பத்தை அகற்றும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மாநாடு நடைபெறும் நிலையில், இன்று கொடிக் கம்பம் விழுந்து சேதமான சம்பவம் தவெகவினர் மற்றும் அந்தப் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
tvk Conference: A 100-foot flagpole fell and damaged a car!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.