மலைக்குன்றில் சிக்கிய 5 காவலர்கள்! உள்ளூர் இளைஞர்கள் உதவியோடு மீட்பு
மலைக்குன்றில் சிக்கிய 5 காவலர்கள், உள்ளூர் இளைஞர்கள் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனர்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக்குன்றில், ரௌடியைப் பிடிக்கச் சென்றபோது, வழுக்குப் பாறைக்கு இடையில் சிக்கிய ஐந்து காவலர்கள், உள்ளூர் இளைஞர்கள் உதவியோடு மீட்கப்பட்டனர்.
ஐந்து காவலர்களும் வழுக்கும் பாறை இடுக்குகளுக்குள் இரவு முழுவதும் சிக்கியிருந்த நிலையில், அவர்களை மீட்க 10 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின பயனாக பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரௌடி ஒருவரைப் பிடிக்கச் சென்ற காவலர்கள், ஒரு சிறு மலைக்குன்றின் மீது வேகமாக ஏறிவிட்டனர். ஆனால், கனமழை பெய்து வருவதால், மலைக்குன்றில் இருந்த பாறைகள் கடுமையாக வழுக்கும் நிலையில் இருந்ததால், அவர்களால் மீண்டும் தரையிறங்க முடியாமல், மலை இடுக்குகளில் சிக்கிக் கொண்டனர்.
ஐந்து காவலர்கள் மலையில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் காவலர்களும் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
டிச. 4ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கிய போதும், அவர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடித்தது. இதில், மலைப் பகுதிகளை நன்கு அறிந்திருக்கும் உள்ளூர் இளைஞர்களும் ஈடுபட்டனர். இதன் பயனாக, 5 காவலர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.