நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை; போலீஸார் விசாரணை
திண்டுக்கல்லில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி - கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் மங்களப்பட்டி பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சுக்கிரன் என்ற சூர்யா (27).
இவர் தனது தந்தையுடன் ரைஸ்மில்லில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கம்பிளியம்பட்டி அருகே கருநாச்சிகுளம் பகுதியில், சூர்யாவின் தலையில் கல்லை போட்டு ரத்தம் தெறித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை, இன்று அதிகாலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து திடுக்கிட்டு, அப்பகுதியினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் பொன். குணசேகரன், உதவி ஆய்வாளர் கிருஷ்ணக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நேற்றிரவு சுமார் 10 மணியளவில் வீட்டை விட்டுச் சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து,இந்தக் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையில் ஈடுபட்டவர் ஒருவரா? ஒன்றுக்கும் மேற்பட்டவரா? எப்பொழுது, எதற்காக கொலை செய்தனர்? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கரும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் லக்கி, அங்கிருந்து சற்று தொலைவில் ஓடிச் சென்று நின்றது.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?