முகப்பு
தமிழ்நாடு

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி! மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்

Updated On : 12 டிசம்பர், 2025 at 12:07 PM
அஸ்வினி வைஷ்ணவ்
பகிர்:

புது தில்லி: வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் புது தில்லியில் தொடங்கி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.

இதற்காக, ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப்பிறகு இந்தியாவின் மொத்த மக்கள்தொகை என்ன என்பது தெரிய வரும். 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கப்போகிறது.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாகவும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

மேலும், அணுசக்தி தொடர்பான மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதுலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு முழு விவரங்கள் வெளியாகவிருக்கின்றன.

summary

Caste enumeration will be included in Census 2027: Union minister Ashwini Vaishnaw.

முழு கட்டுரையைப் படிக்க →