கரூர் பலி! உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: உச்ச நீதிமன்றம்
கரூர் பலிசம்பவத்தில் உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் தகவல்.
புது தில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு உள்ளதாகக் கருதுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்த மனுவை விசாரித்ததில் குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், விசாரணை நடக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் எப்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. எனவே, கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடைமுறையில் தவறுகள் இருப்பதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பின்பாக அது குறித்து விவாதிக்கலாம் என்றும் கூறியிருக்கிறது.
இந்த விசாரணையின்போது, தனி நீதிபதி ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.
விசாரணை அமைப்புகளின் புலன் விசாரணையில் தனிநபர் ஆணையம் தலையிடாது என்றும், ஐபிஎஸ் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுவது தவறானது என்றம் அரசு தரப்பில் கூறப்பட்டது.
மேலும், இந்த தனி நீதிபதி ஆணையம், நெரிசல் தொடர்பான விசாரணைக்கு அமைக்கப்பட்டதல்ல, எதிர்காலத்தில் தமிழகத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறை வகுக்கவும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், அதற்கு பிறப்பித்த தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதன்பிறகு, இது குறித்து விவாதிக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
The Supreme Court has said that there is a flaw in the High Court investigation process in the Karur murder case.
இதையும் படிக்க.. பல்லாயிரம் கிளிகளுக்கு உணவளித்த சேகர் காலமானார்!