மகளிர் உரிமைத் தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் தகவல்!
மகளிர் உரிமைத் தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் உயரும் என்று வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 12) சென்னையில் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் உரிமைத் தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றியின் உச்சமே, அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதுதான். மக்கள் நலத் திட்டங்களை இலவசம் என கொச்சைப்படுத்துபவர்கள்கூட அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கியுள்ளார்கள்.
வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமைந்துள்ளது. இது உதவித் தொகை அல்ல, உரிமைத்தொகை. புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் மூலம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. விடியல் பேருந்து திட்டத்தால் ரூ. 1000 மிச்சமாகிறது.
உரிமைத் தொகையை குழந்தைகளின் கல்விக்கு செலவிடும்போது பல வழியில் வாழ்க்கைத் தரம் உயருகிறது. எதிர்காலத்தில் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது என்று எழுதுவார்கள்” என்று பேசினார்.