பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது பற்றி...
சென்னை பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஏற்கெனவே, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், பொங்கல் விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.