எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவில் ஒன்றிணைவோம் என முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்துகளை வழிமொழிவதாக ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.
சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச., 23) நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது.
தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,
''தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கியது அதிமுக. ஆனால், அது இப்போது அவ்வாறு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு.
பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சந்தித்த 11 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து அதிமுகவை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது.
பழனிசாமி வெற்றி பெறுவார் என்பது வெறும் மாயைதான். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினார்.
''குரங்கு கையில் பூமாலையாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. பலர் கட்சியிலிருந்து ஒதுங்கும் அளவுக்கு நடந்துவிட்டது. 3 தொகுதிகளுக்காக எடப்பாடி பழனிசாமி இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதில் விருப்பம் இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை. அதிமுக கொள்கை, கோட்பாடு என்ன என்றே அவருக்குத் தெரியாது. எடப்பாடியை வீழ்த்துவதுதான் நமது குறிக்கோள்'' என வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.