இலங்கையில் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் தமிழகம் வருகை!
இலங்கையில் விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் வேதாரண்யம் கொண்டுவரப்பட்டனர்.
வேதாரண்யம்: இலங்கைக் கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நால்வர் விடுவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலையில் வேதாரண்யம் கொண்டுவரப்பட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தம்புதாளைப் பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் குணசேகரன் (43), மாரிக்கண்ணு மகன் பாலமுருகன் (30), வில்லாயுதம் மகன் ராமு (22), செட்டி மகன் தினேஷ்(18) ஆகியோர் மீனபிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள், நால்வரும் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, கண்ணாடியிழைப் படகு ஒன்றில் ராமநாதபுரத்திலிருந்து கடலுக்குள் சென்றனர்.
Advertisement
இவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரையும் தாயகம் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள், படகுடன் ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட மீனவர்கள் தொண்டி மீன்வளத் துறைகளிடம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் படகுடன் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊருக்கு பயணித்தனர்.