பென்னாகரம்: அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு!
அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பரமபத வாசல் திறக்கப்பட்டதைப் பற்றி...
பென்னாகரம் அருகே வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி பரமபத வாசலின் வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கூத்தப்பாடி, கே. அக்ரஹாரம், குள்ளாத்திரம் பட்டி, மல்லாபுரம், புதூர் ,பொச்சாரம் பட்டி, மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சொந்தமான லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலானது இந்து சமய அறநிலைய துறையின்கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியில் விழாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நிகழாண்டு வைகுண்ட ஏகாதசி நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவரான லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு, கோயில் தலைமை அர்ச்சகர் சற்குண ராமன் தலைமையிலான அர்ச்சகர்கள் பால், தயிர், பழங்கள், திருநீர், சந்தனம், பன்னீர், மலர்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள், சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதிகாலை சுமார் 5.40 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷங்கள் முழங்க பரமபத வாசலின் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்து, பல்லக்கில் வீதி உலா வந்தார்.
இதனை காண பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 1000 மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில்கோயில் செயல் அலுவலர் கீதாஞ்சலி அறங்காவலர் குழு தலைவர் துரைசாமி, கட்டளைதாரர்கள், ஏழு கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.