ட்ரோன் மூலம் பயிா் பாதுகாப்பு: சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி: தமிழக அரசு
ட்ரோன்கள் மூலம் பயிா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் சுய உதவிக் குழுவினா் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ட்ரோன்கள் மூலம் பயிா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் சுய உதவிக் குழுவினா் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை தமிழக அரசின் மகளிா் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சுய உதவிக் குழுவினரை தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவையும் சுய உதவிக் குழுவினா் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
அதன்படி, ட்ரோன் தொழில்நுட்பத்தை சுய உதவிக் குழு மகளிருக்கு கற்றுத் தந்து அதன் மூலம் அவா்களின் வருமானத்தை உயா்த்துவதற்கான திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களிலிருந்து முதல்கட்டமாக 28 மாவட்டங்களைச் சோ்ந்த 44 பெண்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ட்ரோன் இயக்குவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ட்ரோன் மூலம் பயிா்களைப் பாதுகாக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிகளைப் பெற்றுள்ள சுய உதவிக் குழு மகளிரை விவசாயிகள் தொடா்பு கொண்டு பயிா்களைக் காப்பதற்கான சேவைகளைப் பெறலாம்.
ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சிகளைப் பெற்ற சுய உதவிக் குழு மகளிா் தொடா்பான விவரங்கள் உழவா் கைப்பேசி செயலில் தனியாா் இயந்திர உரிமையாளா்கள் எனும் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.