நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
நான் இன்று தருமபுரி செல்கிறேன், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர்?
நான் ஆஜராவேன் என்று உறுதியளித்த பிறகும் என் வீட்டில் சம்மன் ஒட்டியது ஏன்? நான் பயந்து ஓடி ஒளியும் கோழை அல்ல.
காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? வேறு எந்த பிரச்னையிலாவது இவ்வளவு அவசரம் காட்டியிருக்கிறார்களா? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்த தீவிரத்தைக் காட்ட வேண்டும்.
வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. பெரியார் பற்றி நான் பேசியதால் பெண்ணை வைத்து என்னை அடக்க முயற்சி செய்கிறார்கள்.
நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது, என்ன செய்ய முடியும்? சம்மந்தப்பட்ட அந்த பெண்ணையும் என்னையும் வைத்து விசாரியுங்கள். முதலில் விசாரித்ததையே மீண்டும் மீண்டும் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
நாளை 11 மணிக்கு வர முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சம்மன் அனுப்பியபடி சீமான் இன்று ஆஜராகாத நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சம்மன் ஒட்டினர். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது காவலாளி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததுடன் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் புகார் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை சில நிமிடங்களிலேயே கிழித்த சீமானின் உதவியாளரையும் கைது செய்தனர்.
இதன்பின்னர் சீமானின் மனைவி கயல்விழி, காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.