முகப்பு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி..

Updated On : 2 ஜனவரி, 2025 at 8:10 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர்கோடத்தில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்த முயன்ற பாமக மகளிர் அணி நிர்வாகி செளமியா அன்புமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாமக வழக்குரைஞர் பாலு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும்.

இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல.

வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

இந்த சமூகத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த விவகாரத்தை பத்திரிகையாளர்கள் பொறுப்புணர்வு இன்றி கடந்த 10 நாள்களாக விவாதம் செய்துவருகிறார்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments