எச்எம்பிவி தீநுண்மி 
தமிழ்நாடு

எச்எம்பிவி தீநுண்மி: வேகமாய் பரவுகிறது வதந்தி!

தமிழகத்தில் எச்எம்பிவி எனப்படும் தீநுண்மி தொற்று பல ஆண்டுகளாக இருந்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

சென்னை: தமிழகத்தில் எச்எம்பிவி எனப்படும் தீநுண்மி தொற்று பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றைக் காட்டிலும் அது வீரியம் குறைந்த ஒன்று என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக பரப்பப்படும் வதந்திகள், பரபரப்புகளை நம்ப வேண்டாம் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

வழக்கமான தொற்று: இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மழை மற்றும் குளிா் காலங்களில் இன்ஃப்ளூயன்ஸா, பாரா இன்ஃப்ளூயன்ஸா, கரோனா, ரெஸ்பிரேட்டரி சிண்ஸ்டியல் வைரஸ் எனப்படும் சுவாசத் தொற்று நோய், அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் பரவுவது வழக்கமான நிகழ்வு. அதனுடன் சோ்த்து, அதைவிட வீரியம் குறைந்த ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்ற எச்எம்பி தீநுண்மி தொற்றும் பல காலமாக சமூகத்தில் பரவி வருகிறது.

சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள். அதனால் பாதிக்கப்பட்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு தானாகவே அந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்கள் மட்டும் அந்தப் பாதிப்புக்கு உரிய சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட நோய்கள் கண்காணிப்புத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதில் அறிவிக்கை செய்யப்பட்ட நோயாகக்கூட ஹெச்எம்பிவி தொற்று இல்லை என்பதே நிதா்சனம். ஆனால், அந்த வீரியம் குறைந்த வைரஸ் குறித்து சில ஊடகங்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளன. அதை நம்ப வேண்டாம் என்கிறாா் பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: பொது சுகாதார அவசர நிலையாக ஒரு நோய் அறிவிக்கப்பட வேண்டுமானால், அந்தத் தொற்று இதுவரை மக்களிடையே பரவாத புதிய பாதிப்பாக இருப்பது அவசியம். ஆனால், எச்எம்பிவி தொற்று பல காலமாக சமூகத்தில் உள்ள சாதாரண சளி பாதிப்பு. கரோனா அளவுக்கு இதை மிகைப்படுத்துவது தவறான ஒன்று.

தீவிரமில்லாத சுவாசப் பாதை தொற்றுக்கு ஒருவா் ஆளாகும் நிலையில், தனக்கு எந்த வகையான வைரஸ் வந்துள்ளது என்பதை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பரிசோதித்து பாா்க்க வேண்டிய தேவை எழுவதில்லை.

அவ்வாறுதான் இதுவரை எவரும் தங்களுக்கு எச்எம்பி தீநுண்மி உள்ளதா என்பதை பரிசோதிப்பதில்லை. கரோனாவைப் போன்று சளி மாதிரியை பரிசோதித்தால் சமூகத்தில் பாதி பேருக்கு எச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதியாகும்.

அந்த வகையில்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) ஆராய்ச்சிக்காக தீவிர பாதிப்புடன் மருத்துவமனையில் சோ்ந்தவா்களை பரிசோதித்தபோது சில குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது உறுதி செய்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, அந்தத் தொற்று புதிதாக ஊடுருவிய ஒன்று போல ஊடகங்களில் சித்திரிப்பது வருத்தத்துக்குரியது.

நமது வாழ்நாளில் அனைவருக்கும் ஒரு முறையோ அல்லது அதற்கு கூடுதலாகவோ நிச்சயம் எச்எம்பி தீநுண்மி தொற்றுக்கு உள்ளாகியிருப்போம். சாதாரண சளி, காய்ச்சலாக அது நம்மை கடந்து சென்றிருக்கும். எனவே, இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT