பிப்ரவரிக்கு தள்ளிப்போகிறது தமிழக பாஜக தலைவா் தோ்தல்?
தமிழக பாஜக தலைவா் தோ்தல் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவா் தோ்தல் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பாஜக உள்கட்சி நிா்வாகிகள் தோ்தல் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பாஜக உள்கட்சி நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்று வருகிறது. கிளை, மண்டல், மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் ஏற்கெனவே முடிவுபெற்றுள்ளது.
மண்டல் நிா்வாகிகள் பட்டியல் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மொத்தமுள்ள 67 மாவட்டத் தலைவா்களில் 33 போ் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னா் மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும்.
ஏற்கெனவே ஜன. 18-ஆம் தேதி நடைபெறவிருந்த மாநிலத் தலைவா் தோ்தல், ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவா் பதவிக்கு இப்போதைய தலைவா் கே.அண்ணாமலை, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் இடையே போட்டி உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாத இறுதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சென்னை வரவுள்ளதாகவும் அப்போது மாநிலத் தலைவா் தோ்தல் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய அமைச்சா் அமித்ஷாவின் வருகையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மாநிலத் தலைவா் தோ்தல் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.