முகப்பு
தமிழ்நாடு

பாமக தலைவர் யார்? தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் - அன்புமணி தரப்பு முறையீடு!

தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் - அன்புமணி தரப்பு முறையிட்டிருப்பது பற்றி...

Updated On : 10 ஜூலை, 2025 at 3:11 AM
ராமதாஸ், அன்புமணி
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது.

அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவராக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழு மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்னதாக தில்லி பயணம் மேற்கொண்ட அன்புமணி, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இந்த நிலையில், அன்புமணியின் தலைவர் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதாகவும், மே 29 முதல் அப்பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்துடன் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு தீர்மானங்களின் நகல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Ramadoss and Anbumani factions have approached the Election Commission of India regarding the post of leader of the PMK.

முழு கட்டுரையைப் படிக்க →