முகப்பு
தமிழ்நாடு

ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு நல்லது நடக்கும்: ஆர்.பி. உதயகுமார்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

Updated On : 24 ஜூலை, 2025 at 7:57 AM
ஆர்.பி. உதயகுமார் பேட்டி
பகிர்:

எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அந்த நோக்கம் நிறைவேறும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி மக்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில்,

தவெக, நாதகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஏன் அழைப்பு விடுக்கிறார்? அவர்கள் அதை நிராகரித்துள்ளனர் குறித்த கேள்விக்கு,

'அதிமுக, பிரதான கட்சியான திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமகவின் அன்புமணி, ராமதாஸ் திமுகவை எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் அந்த நோக்கம் நிறைவேறும்.

திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக திருமாவளவன் ஆகியோர் ஆட்சிக்கு மாறான கருத்துக்களைச் சொல்கின்றனர். 20 சதவீதம் ஆதரவு, 80 சதவீதம் எதிர்ப்பு நிலையில் உள்ளனர்.

திமுகவை எதிர்க்கும் கட்சிகளில் 50 ஆண்டு கால வரலாறு, கொள்கை கொண்ட, மக்கள் நம்பிக்கை கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 80 சதவீத திமுக எதிர்ப்பு பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக் கூடாது.

எனவே, அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல் கிடைக்க வேண்டும் என்ற மக்கள் விரும்பும் நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.

எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும். எதிர்க்கும் கட்சியில் நம்பிக்கை பெற்ற தலைவர் எடப்பாடி. பிரிந்து நின்றால் திமுகவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறாது' என்றார்.

அன்வர்ராஜா விலகல் குறித்த கேள்விக்கு, 'தனிப்பட்ட ஒருவர் எடுக்கும் முடிவு கட்சியைப் பாதிக்காது. அதை பொதுவிவாதத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. நாங்கள் புலி வேட்டைக்குச் செல்கிறோம். இடையில் எலி. அணில் பாடும், ஓடும், செல்லும், அதையெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை' என்று பதிலளித்தார்.

ஓபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் இணைப்பு காலம் கடந்துவிட்டது என்றார்.

அதிமுகவுடன் பல கட்சிகள் இணைய அதிமுக - பாஜக கூட்டணி தடையாக உள்ளதா என்ற கேள்விக்கு, "நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம்" என்றார்.

மேலும், மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து முறையான விசாரணை நடக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பதால் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவில் இருந்த பணம் மக்களுடைய பணம். அது பாதுகாப்பாக இருந்தது. ஆனால் திமுகவின் ஆட்சியில் அரசு கஜானா பணம் தங்களின் பணம் என சட்டைப்பையில் சர்வ சாதாரணமாக எடுத்து வைக்கப்படுகிறது.

500 கோடி, ஆயிரம் கோடி என்கிறார்கள். குற்ற உணர்வே இல்லாமல் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை கலையாக வைத்திருப்பதை பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது என்று கூறினார்.

கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற கேள்விக்கு, 'பொறுத்திருந்து பாருங்கள். கூட்டிக் கழித்து பாருங்கள், கணக்கு சரியாக வரும்.

எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதைப்போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார்.

நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணைய விசாரணை அதிமுகவுக்கு தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு, ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் எல்லாம் சரியாகும். அதிமுகவிற்கு நல்லதே நடக்கும் என்றார்.

ADMK former minister R.B. Udhayakumar said that the opposition parties will come together to defeat dmk.

முழு கட்டுரையைப் படிக்க →