முகப்பு
தமிழ்நாடு

நாடாளுமன்றத்தின் சிங்கம்! மாநிலங்களவையில் வைகோவுக்கு பிரியாவிடை!

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

Updated On : 24 ஜூலை, 2025 at 7:21 AM
மாநிலங்களவையில் வைகோ - SANSAD
பகிர்:

மாநிலங்களவையில் இருந்து இன்றுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு சக உறுப்பினர்கள் அவையில் பிரியாவிடை அளித்தனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவா் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 6 எம்பிக்கள் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் இன்று நிகழ்த்தினர்.

முன்னதாக வைகோவை குறிப்பிட்டு பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்,

“நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும், தனது அனல்பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.

1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை இந்த அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2019 இல் மாநிலங்களவை உறுப்பினரானார். இந்த அவைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார்.

கூட்டாட்சி, சமூக நீதி பிரச்னைகளுக்காக அவரது குரல் ஒலித்தது. கட்சி பாகுபாடின்றி நாட்டின் நலனுக்காக செயல்பட்டவர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஓய்வுபெறும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் நிகழ்த்தினர்.

இதில், திமுக உறுப்பினர் வில்சன், ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருடன் மநீம கமல், திமுகவின் சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

summary

MDMK General Secretary Vaiko retires from the Rajya Sabha today, his fellow members bid him farewell in the House.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.