மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு!
மாநிலங்களவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றித் தேர்வானது பற்றி...
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யான திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் அதிமுக சார்பில் தம்பிதுரையும் அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அதேபோல திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
வேட்புமனுவை வாபஸ் பெற இன்று இறுதிநாள் ஆகும். வேறு யாரும் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும் என்ற சூழ்நிலையில் இதுவரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ் முதலில் வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் 6 பேரும் மாநிலங்களவைக்கு எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்புமனுவை முழுமையாக நிரப்பாததாலும் பாமகவின் ராமதாஸ் ஆதரவு வேட்பாளர் சுவாமிநாதனின் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
All 6 candidates including thambidurai, tiruchy siva elected in the Rajya Sabha elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.