முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவம்! பிகார் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி!!

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சடலம் மாறிய சம்பவத்தில், தமிழக முதியவர் உடல், பிகார் கொண்டு செல்லப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி.

Updated On : 6 ஜூன், 2025 at 8:22 AM
முதியவா் ராஜேந்திரன்
பகிர்:

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சடலம் மாற்றிக்கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில இளைஞரின் சடலத்துக்குப் பதிலாக தமிழக முதியவரின் சடலம் கொடுக்கப்பட்டு, அது பிகாருக்குக் கொண்டு செல்லப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவமனை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவா் தீராத வயிற்று வலியின் காரணமாக அவதிக்குள்ளாகி வந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அருகில் இருந்தோா் மீட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி உயிரிழந்தாா்.

திருத்தணி காவல் நிலையத்தில் இருந்து பிரேத பரிசோதனை செய்வதற்கான அனுமதி கடிதம் வாங்கி வருவதற்காக உறவினர்கள் சென்றிருந்தனா். காவல் நிலையத்தில் கடிதம் பெற்றுக்கொண்டு திருவள்ளூா் பிணவறையில் வைக்கப்பட்ட முதியவா் சடலத்தை பெறுவதற்காக உறவினா்கள் வந்தனா். அப்போது, ராஜேந்திரன் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் சடலத்தை கொடுத்ததால் அதிா்ச்சி அடைந்தனா்.

மேலும் விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரனுக்கு 60 வயதான நிலையில், 55 வயதில் இருக்கும் வட மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரின் சடலத்தை எடுத்துச் செல்லும்படி கூறியதால் உறவினர்கள் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவர்களே பிணவறையை முற்றுகையிட்டு ராஜேந்திரனின் சடலத்தைத் தேடினர்.

மேலும், இதற்கு முன்பு யாா், யாா் சடலம் வெளியே கொடுக்கப்பட்டது என்பது குறித்து அந்த அறையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போதுதான், முதியவர் ராஜேந்திரன் சடலத்தை வடமாநில இளைஞர் சடலம் எனக் கருதி பிகாருக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிகாா் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சோ்ந்த மனோஜ் மாஞ்சி (55) என்பவா், அவரது உறவினா் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 30-ஆம் தேதி புறப்பட்டு 1-ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அங்கிருந்து 2-ஆம் தேதி வெங்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிக்கு வந்து சோ்ந்துள்ளாா்.

தொடா்ந்து 2-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சோ்த்த நிலையில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பிகாரில் இருந்து மனோஜ் மாஞ்சியின் உறவினா் அவரது சடலத்தை பெற்றுச் செல்வதற்காக வந்துள்ளார். ஒருவா் மட்டும் வந்து பிரேத பரிசோதனைக்கு பின் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மனோஜ் மாஞ்சி உடலுக்குப் பதிலாக ராஜேந்திரன் உடல் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூா் நகர போலீஸாா் பேச்சு நடத்தி பிகாருக்கு கொண்டு சென்ற முதியவரின் சடலம், மீண்டும் கொண்டு வரும்படி தெரிவித்தனா். அதையடுத்து முதியவா் ராஜேந்திரன் சடலத்தை வெள்ளிக்கிழமை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி உறவினர்களை அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட பெண் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.