முகப்பு
தமிழ்நாடு

கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் பற்றி...

Updated On : 17 ஜூன், 2025 at 8:54 AM
அமர்நாத் ராமகிருஷ்ணா - X
பகிர்:

கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழின், தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அறிக்கைகள் சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கீழடி தொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த அந்த அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மத்திய பாஜக அரசு திருத்தம் செய்ய கோரியிருந்தது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

பண்டைய கால ஆய்வு(Antiquity) மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா இருந்த நிலையில், இனி நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத்தின் வசம் இருந்த பண்டைய கால ஆய்வுத் துறை, ஹெச்.ஏ. நாயக்கிடம் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.ஏ. நாயக் ஏற்கெனவே அகழாய்வின் இயக்குநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், "தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.

கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.

மத்திய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.