தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த பிரதமரிடம் கார்த்தி சிதம்பரம் மனு!
தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து, நோய்த் தொற்று அதிகரிப்பதாகவும் கவலை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மனு அளித்தார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ``நாடாளுமன்றத்தில் பிரதமரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு கவலைகளைத் தெரிவிக்கப்பட்டது. உலகளவில் இந்தியாவில்தான் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. மேலும், உலகளவிலான ரேபிஸ் தொற்று இறப்புகளில் 36 சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.
விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், செயல்படுத்தப்படாமல் பயனற்றதாகவே இருக்கிறது. தெருநாய்கள் பிரச்னையைத் தீர்க்க போதிய வளங்கள், நிதி, தொழில்நுட்ப வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வளிக்குமாறு கோரப்பட்டது. இந்த பிரச்னையைத் தீர்க்க தேசிய நடவடிக்கை குழு அமைக்குமாறு கோரிக்கை அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமேசான் நிறுவனருக்கு திருமணம்!