கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்
கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் மநீம தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுறாா்.
இதையடுத்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
Advertisement
இதன்பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: முதல்வா் அழைத்ததன்பேரில் அவரைச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, மாநிலங்களவையில் நுழைவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வா் அறிவுறுத்தினாா். வேட்புமனு தாக்கல் தொடா்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
மாநிலங்களவையில்தான் என்னுடைய குரல் முதல்முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடா்ந்து குரல் கொடுத்துதான் வருகிறேன்.
மன்னிப்பு கேட்க மாட்டேன்: தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அன்பு கா்நாடகம், ஆந்திரம், கேரள மக்களுக்குப் புரியும்.
ஏற்கெனவே நான் பல மிரட்டல்களைச் சந்தித்துள்ளேன். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றாா்.
‘கட்சி ஆரம்பித்த புதிதில் திமுகவை எதிா்த்த நீங்கள், இப்போது திமுகவை ஆதரிப்பது ஏன்?’ என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘நாட்டுக்குத் தேவை; அதனால் இங்கு வந்துள்ளேன்’ என்றாா்.