திமுக அரசு 'பெண்களுக்கான அரசு' என்று கூறுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூச்சப்பட வேண்டும் என்று கோவையில் பெண் கடத்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக விட்டுக்கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.
முதல்வரே, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.