தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
"தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும். இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கும். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னுடைய சகோதரரைப் போன்றவர்.
தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது, இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை உண்டுபண்ண வேண்டும் என்று சிலர் கிளப்பி விடுகின்றனர். எங்கள் கூட்டணி வலிமையாகவே உள்ளது.
2021 தேர்தலைவிட 2026 தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம். 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம். திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று பேசியுள்ளார்.
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் தெளிவுபடுத்திய நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
"கூட்டணி ஆட்சியைப் பொருத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் தனித்தனி கருத்துகள் உள்ளன. திமுகவும் காங்கிரஸும் தனித்தனி கட்சிகள், அந்த கட்சிகளுக்கு ஏற்ற கருத்துகளைக் கொண்டுள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு தங்களுடைய கருத்துகளை கூட்டத்தில் முன்வைக்கும்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது அவரது கருத்து. அவருக்கு தன்னுடைய கருத்துகளைச் சொல்ல ஜனநாயக சுதந்திரம் இருக்கிறது. அதேபோல காங்கிரஸ் கட்சிக்கும் தனி கருத்துகள் உள்ளன. கூட்டத்தில் நாங்கள் அதுகுறித்து பேசுவோம். கூட்டணி பேச்சுவார்த்தை பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.