கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் அடைப்பு!
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை : கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் காவல்துறையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றஞ்சாட்டப்பட்டவர், அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துவரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் கடந்த 2 ம் தேதி இரவு கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மூன்று பேரும் மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி, காளி என்கின்ற காளீஸ்வரன், மதுரையைச் சேர்ந்த குணா என்கின்ற தவசி ஆகியோர் துடியலூரில் பதுங்கி இருந்த போது கடந்த 3 ம் தேதி இரவு தனிப்படை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். இதில் அவர்கள் மூன்று பேர் கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதன் பிறகு மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு கால்களில் இருந்த துப்பாக்கி குண்டுகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார், கூடுதல் விசாரணை ஆய்வாளர் லதா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காட்ட மாணவி முன்பு அடையாள அணிவகுப்பினை, நீதிபதி முன்னிலையில் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று இளைஞர்களும் குணம் அடைந்த பிறகு நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்துவது என்று போலீசார் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அவர்கள் குணமடைய காத்து இருந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த மதுரை சேர்ந்த குணா என்கின்ற தவசி ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்து இருந்தது. அவர் தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து விட்டார்.எனவே அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளக் கூறினர்.
அதன்படி குணா என்ற தவசி கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரை வருகின்ற 19 ஆம் தேதி வரை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதால் காவல் துறையினர் குணா என்கின்ற தவசியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அங்கு சிறையில் அடைத்தனர்.
காளி என்கின்ற காளீஸ்வரன், கார்த்திக் என்ற கருப்பசாமி ஆகியோரம் குணம் அடைந்த பிறகு விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
அது கோவை மத்திய சிறையில் நடைபெறும் என்றும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.