சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!
சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி...
சேலம்: சேலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையில் கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் புதன்கிழமை காலை காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கோவை நோக்கி, 28 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை மணலி பகுதியைச் சேர்ந்த மூவேந்தர் என்பவர் ஓட்டியுள்ளார்.
இந்தப் பேருந்து அதிகாலை 6 மணிக்கு கோவை சென்றடைய வேண்டிய நிலையில், 4 மணி நேரம் தாமதமானதால் ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியுள்ளார்.
இதன் காரணமாக சேலம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மூவேந்தர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 8 வயது சிறுமி உள்பட 12 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு விரைந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய போலீசார் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த ஆம்னி பேருந்தை கிரேன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.