கூத்தாடி கட்சியா? திமுகவுக்காக எம்ஜிஆர் வசனம் பேசிய விஜய்!
திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்ஜிஆரின் வசனத்தை மேற்கோள் காட்டி விஜய் பேசியது குறித்து...
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்ஜிஆரின் வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசினார்.
மர்ம யோகி படத்தில் எம்ஜிஆரின் பெயர் கரிகாலன். அதில் அவர் ஒரு வசனம் பேசியிருப்பார்.
குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன் என எம்ஜி ஆர் வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் ஏன் பேசுகிறேன் என்று வேண்டியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
ஏன் விஜய்யை தொட்டோம்? விஜய் உடன் இருக்கும் மக்களைத் தொட்டோம் என நினைத்து வருந்துவார்கள்.
நமக்கு அரசியல் புரிதல் இல்லை என்கின்றனர். அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தி நம்மை தற்குறிகள் என்கின்றனர்.
தவெகவினர் தற்குறியா?
தவெகவினர் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை தற்குறிகள் எனக் கூறி சிலர் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.
மக்கள் என்ன தற்குறிகளா? வாக்கு செலுத்திய மக்களை தற்குறிகள் என்று அழைப்பதா? மக்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? தவெகவுக்கு ஆதரவு தரும் இளம் தலைமுறையினரை தற்குறிகள் என்கிறார்கள். இந்த தற்குறிகள்தான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப்போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் அல்ல. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான ஆச்சரியக்குறிகள்! மக்களோடு மக்களாக நிற்கும் நம்மை மக்களே தீர்மானிப்பார்கள். நிச்சயம் வெல்வோம்.
தவெகவினரை தற்குறிகள் என அழைக்க வேண்டாம் என ஒரு குரல் வருகிறது. அவர் வேறு யாருமில்லை, மாற்று கட்சியைச் சேர்ந்தவர்தான். நம் கொள்கைத் தலைவரான அஞ்சலை அம்மாவின் உறவினர்தான். தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம் கட்சியைச் சேர்ந்தவர் பேசுகிறார் என்று அக்கட்சியின் தலைமைக்கு ஒரே குழப்பம். அந்தக் குழப்பம் அவர்களுக்கு தொடரும். தவெகவுக்கான ஆதரவு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வரும். சும்மா பிளாஸ்டு, பிளாஸ்டு, பிளாஸ்டுதான்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதும் கூட கூத்தாடிக் கட்சி, நடிகர் கட்சி என்று விமர்சித்தனர். எம்ஜிஆரை கூத்தாடி என்று விமர்சித்தனர். விமர்சித்தவர்களே பின்னர் எம்ஜிஆர் உடன் சேர்ந்துகொண்டனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் எம்ஜிஆருடனே நின்றனர். இது வரலாறு. இது நம்மை விட அவர்களுக்கு நன்கு தெரியும். 54 ஆண்டுகளாக இதே கதறல்கள்தான். இனியும் கதறல்கள்தான் என விஜய் பேசினார்.
இதையும் படிக்க | தவெக கொடி இடம்பெறாத விஜய்யின் மக்கள் சந்திப்பு!