'டியூட்' படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை!
'டியூட்' படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை...
'டியூட்' படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'கருத்த மச்சான்' மற்றும் 'நூறு வருஷம்' பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள தனது பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'தீபாவளி பண்டிகைக்கு வெளியான 'டியூட்' படத்தில், எனது இசையில் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' என்ற பாடலும், 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த 'நூறு வருஷம்' பாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்னுடைய அனுமதியின்றி இந்த இரண்டு பாடல்களையும் பயன்படுத்தி உள்ளனர். எனவே, இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
Advertisement
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'டியூட்' படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த ' 'கருத்த மச்சான்' மற்றும் 'நூறு வருஷம்' பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். பாடல்களை நீக்க 7 நாள்கள் அவகாசம் வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.