சென்னையை நாளை மாலை நெருங்குகிறது டிட்வா! மழை எப்படி இருக்கும்?
சென்னையை நாளை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நெருங்கும் டிட்வா காரணமாக மழை நிலவரம் பற்றி
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கை மற்றும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களுக்கு அருகே நிலவி கன மழையைக் கொடுத்து வருகிறது.
இதனால், இலங்கையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை, மற்றும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 70 பேர் பலியாகியுள்ளனர். பலரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிட்வா புயலின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகக் கடற்கரையை, டிட்வா புயலானது ஒட்டியே நகர்ந்து வரும். நாளை வரை அது தமிழகக் கடற்கரைக்கு இணையாக பயணித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நெருங்குகிறது.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நாகை மாவட்டங்களில் குறிப்பாக கடலுக்கு நெருக்கமாக உள்ள பகுதிகளில் 175 முதல் 250 மி.மீ. வரை மழைப் பதிவாகியிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை நிலவரம் - புயலானது கடல் பரப்பில் இருக்கும்வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும். இது இன்று மாலை வரை தொடரும். அதன்பிறகு, கனமழையானது கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இடம்பெயரும். டெல்டா மாவட்டங்களுக்கு படிப்படியாக மழை குறையும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு முதல் மழை தொடங்கும். முதலில் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில் தொடங்கி மழை மெல்ல நகருக்குள் ஊடுருவும்.
செங்கல்பட்டின் தென் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு மிகச் சிறந்த நாளாக அமையும்.
கனமழையைப் பொறுத்தவரை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களின் உள் பகுதிகள் மற்றும் விழுப்புரம்.
மிக கனமழையைப் பொறுத்தவரை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அதி கனமழை பொழியும் இடங்களாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ஜானின் முந்தைய பதிவில், மழை மெதுவாக கடலூர், பின்னர் புதுச்சேரிக்கு நகர்ந்து, இன்று இரவு சென்னைக்கு நகரவிருக்கிறது. நேற்று விண்டியில், புயலை பார்வையிட்டவர்கள், டெல்டா அருகே புயல் வலுவிழந்துவிடும் என்று கருதியிருக்கலாம். இப்போது பார்த்தால், புயல் வலுவிழக்கவில்லை, நவம்பர் 30 ஆம் தேதி சென்னைக்கு அருகில் டிட்வா ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகிறது என்று இன்று காலை பதிவிட்டிருந்தார்.