கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்...
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இது நவ. 30 அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலிலும் இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.