தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?
விஜய்க்கான பாதுகாப்பை அதிகரிக்க சிஆர்பிஎஃப் பரிந்துரை...
தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிஆர்பிஎஃப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
மேலும் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது. விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக தரப்பு கூறியிருந்தது.
விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அதிகமாக அதாவது ஒய் பிளஸ் அல்லது இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.