ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!
தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,400 உயர்வு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக மொத்தம் ரூ. 1,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை (செப்.29) முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. செப்.29-இல் சவரன் ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கும், செப்.30-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும், அக்.1-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கும், அக்.2-இல் விலை மாற்றமின்றி ரூ.87,600-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து அக்.3-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125-க்கும் சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.