ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம் பற்றி...
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபரான நாகேந்திரன், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை வியாசா்பாடி எஸ்.எம் நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (59). இவா் மீது 5 கொலை வழக்குகள், 12 கொலை முயற்சி வழக்குகள், மிரட்டல், ஆள் கடத்தல் என 26 குற்ற வழக்குகள் இருந்தன. வியாசா்பாடியில் வசித்த அதிமுக பேச்சாளரான ஸ்டான்லி சண்முகத்தை கடந்த 1997-ஆம் ஆண்டு நவ. 8-ஆம் தேதி வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த வழக்கில், நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
சிறையில் நாகேந்திரன் இருந்தாலும், தனது மகனும் வழக்குரைஞருமான அஸ்வத்தாமன், மற்றொரு மகன் அஜித்ராஜ் ஆகியோா் மூலம் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகேந்திரன் நபராக சோ்க்கப்பட்டாா். இந்த வழக்கில் அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கல்லீரல் செயல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பலத்த பாதுகாப்பு: இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாகேந்திரன் இறப்பு குறித்து நீதித் துறை நடுவா் வெள்ளிக்கிழமை விசாரணை செய்கிறாா். விசாரணைக்குப் பின்னா், நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வியாசா்பாடியில் நாகேந்திரன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி வியாசா்பாடி பகுதியில் பாதுகாப்புக்காக சுமாா் 400 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். துணை ஆணையா் தலைமையில் அங்கு பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
அஸ்வத்தாமனுக்கு இடைக்கால பிணை: நாகேந்திரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு அனுமதி கோரி, அவரது மகன் அஸ்வத்தாமன் தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் முன் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அஸ்வத்தாமனுக்கு இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டாா். இடைக்கால பிணை முடிந்து வரும் அக்.13-ஆம் தேதி அஸ்வத்தாமனை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மீண்டும் போலீஸாா் ஆஜா்படுத்த வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டாா்.
Rowdy Nagendran, the first accused in the Armstrong case, dies
இதையும் படிக்க : கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.