நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் பற்றி...
தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் நாளை(அக். 14) முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக். 14 ஆம் தேதி கூடும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு,
"நாளை (அக்.14) சட்டப்பேரவை கூடுகிறது. மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்கண்ட் முதல்வராக இருந்த சிபு சோரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
நாளை(அக். 14) மறைந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
அக். 15 ஆம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அக். 17 ஆம் தேதி விவாதத்திற்கு முதல்வர் பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.